கேள்வி – பதில்கள் 3-10-2007
அக்டோபர் 9, 2007
வே. மதிமாறனிடம் கேளுங்கள்
கன்னட பிரசாத்திற்கு தமிழ் இதழ்கள் அதிக முக்கியத்துவம் தருகின்றனவே?
சிவகுமார், திருப்பூர்.
ஒரு வேளை “தொழில்’ ஒற்றுமை காரணமோ என்னவோ? ஏன்னா இரண்டு பேருமே நடிகைகளைதான் முதலீடா வைச்சி தொழில் நடத்துகிறார்கள். தமிழக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கன்னட பிரசாத்தின் ‘தீரமிக்க’ வாழ்க்கை வரலாற்றை பத்திரிகைகள் போட்டி போட்டு வெளியிடுகின்றன. அவைகளை அவர் படிக்க நேர்ந்தால், திடுக்கிட்டிருப்பார். “இவர்கள் நம்ம “தொழிலுக்கு’ வந்தால் நம்மநெலமை அதோ கதியாகியிருக்கும். நல்லவேளை ஜெயில் தண்டனையோடு தப்பிச்சோம்’ என்று. கன்னட பிரசாத் நடிகைகளுக்கு, தொழில் அதிபர்களுக்கு, பணக்காரர்களுக்கு “மாமா வேலை’ பார்த்தார். இந்தப் பத்திரிகைகள் வாசகர்களுக்கு ‘மாமா வேலை’ பார்க்கிறது.
சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் திமுக காரர்களால் தகர்க்கப்பட்டுள்ளதே? என்னதான் நடக்கிறது தமிழ் நாட்டில்? -எம்.ராமமூர்த்தி.
இப்போதுதான் தமிழ்நாட்டில் நல்ல அறிகுறிகள் தென்படுகிறது.
இந்து முன்னணி பெரியார் சிலையை இடித்தபோது பெரியாரின் உண்மை உணர்வாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு – கலைஞரின் தலையை வெட்ட வேண்டும் என்று யாரோ வட இந்தியாவில் உள்ள ‘வாந்திபேதி’ என்கிற சாமியார் ஒருவன் அறிவித்த வெறுப்புக்கு, பதிலாக சுயமரியாதை உள்ள திமுக தொண்டர்களின் கொதிப்பு, என்று தமிழ்நாடு பெரியார் வழியில் களைகட்டியிருக்கிறது.
ராமரையே இடித்த தமிழ்நாட்டிற்கு, ராமர் பாலம் எம்மாத்திரம்?
சீதையை மணம் முடிப்பதற்காக ஜனகன் வைத்த வில்லை முறித்தான் ராமன்.
பெரியாரோ ராமனையே முறித்தார்.
அவர் வாழ்ந்த தமிழ்நாடு என்பது இப்போதுதான் தமிழர்களுக்கு ஞாபகம் வந்திருக்கிறது.
உங்கள் கேள்வியில் ஒரு சின்ன திருத்தம், பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் தகர்க்கப்படவில்லை.
தாக்குதலுக்கு மட்டும் உள்ளாகி இருக்கிறது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் வருத்தம் வேறு.
என் வருத்தம் வேறு.
நகைக்கடைக்காரன் அட்சய திரிதியை என்று சொல்லி மக்களை கூட்டமாக கடையில்
குவிப்பது பற்றி உங்கள் கருத்து?
-ராமஜெயம்
சமூக விழிப்புணர்வு மே மாத இதழில் இப்படி எழுதினேன்,
அட்சய திருதியை அன்று நகை வாங்கினால்
மிகவும் நல்லதாம்.
உண்மைதான்.
நகைக்கடைக்காரனுக்கு.

